DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம் “அலங்கு”

109

சென்னை:

தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகி இருக்கும் திரைப்படம்தான் ‘அலங்கு’. கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும்  , தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும்  இடையே நடக்கும்  சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர். இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் , சரத் அப்பானி, அவர்களுடன் காளிவெங்கட் உடன் குணாநிதி கதை நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது .

இந்த திரைப்படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார் , இவர் உறுமீன் , பயணிகள் கவனிக்கவும் என்ற இரு திரைப்படங்களை இயக்கியவர். மேலும் சமீபத்தில் வெற்றிபெற்ற குட்நைட் திரைப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த செல்ஃபி திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது

அலங்கு – என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும். அத்துடன் ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும் , ஆய்வாளர்களும் கூறுகின்றனர். ஆனால் கால போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும் மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் , நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தி  இருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க வனம் , வனம் சார்ந்த மக்கள் என படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு , கேரள மாநிலம் இடுக்கி ,அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம் , கோவை மாவட்டம்  ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர் படக்குழு .முற்றிலும்  மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் வன விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து இப்படம் திரைக்கு வரும் எனவும் படக்குழு தெரிவித்தது .