“மிஸ் ஷெட்டி-மிஸ்டர் பொலி ஷெட்டி” திரைப்பட விமர்சனம்!

84

சென்னை:

நவீன் பொலி ஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி, துளசி, முரளி ஷர்மா மற்றும் பலர் நடிப்பில் மகேஷ் பாபு இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரதன் இசையில் வெளிவந்து இருக்கும் ஒரு உன்னதமான மாறுபட்ட காதல் கதையுள்ள படம்தான் “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி”

லண்டனில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் சமையல்கலை  நிபுணராக பணியாற்றுகிறார் அனுஷ்கா.  அவர் தாய் ஜெயசுதாவுடன் வசிக்கும் போது இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.. தாயின் விருப்பப்படி இந்தியாவுக்கு வரும் அனுஷ்காவிடம் அவரது தாய் ஜெயசுதா திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்.  ஆனால் அனுஷ்காவுக்கு யாரையும் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை.  இந்த சூழ்நிலையில் அனுஷ்காவின் தாயான  ஜெயசுதா இறந்து விடுகிறார். அப்போது தனியாக வாழ்ந்து வரும் அனுஷ்கா தன் தோழியிடம் திருமணம் செய்யாமல் தனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இதனை கேட்டவுடன் அவரது தோழி ‘எப்படி இது சாத்தியமாக இருக்க முடியும்’.  நீ திருமணம் செய்து கொண்டால் தானே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று வாதாடுகிறார்.  ஆனால் அனுஷ்காவுக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு மையத்தில் சென்று ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார். இது குறித்து செயற்கை கருத்தரிப்பு மையம் உள்ள மருத்துவமனைக்கு தன் தோழியுடன் செல்கிறார். அங்கு மருத்துவரிடம் குழந்தை பெற்றுக் கொள்வதைப்பற்றி  ஆலோசிக்கிறார்.  அவர் ஆலோசிக்கும்போது அங்குள்ள சில ஆண்களை பார்த்தவுடன் அவர்களது விந்தணு தனக்கு தேவையில்லை.    ‘நானே ஒரு இளைஞனை அழைத்து வருகிறேன் அவன் மூலமாக விந்தணு பெற்று தருவதாகவும்,  அதை வைத்து எனக்கு கருவுற்று குழந்தை பிறக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று மருத்துவரிடம் கூறுகிறார்.

இந்த சூழ்நிலையில் பல மேடைகளில் ஸ்டாண்ட் ஆப் காமெடி செய்யும் நவீனிடம்  சந்தித்து பேசுகிறார். நவீனுக்கு ஸ்டாண்ட் ஆப் காமெடி செய்யும் வாய்ப்புகள் வாங்கி தருவதாக சொல்லி நவீனை தன் நண்பனாக்கிக் கொள்கிறார். கார்ப்பரேட் கம்பெனியில்  பணி புரியும் நவீன் அனுஷ்கா மீது காதல் கொள்கிறார்.  ஆனால் அனுஷ்கா  காதல் எல்லாம் ஒன்றும் வேண்டாம் எனக்கு உன் மூலம் ஒரு குழந்தை பிறக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை என்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நவீன் முதலில்  ஒப்புக்கொள்ள மறுக்கிறார். பிறகு ஒரு வழியாக அனுஷ்கா சொல்வது போல் நடந்து கொள்கிறார். இந்நிலையில்  அனுஷ்காவுக்கு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பிறந்தததா? இல்லையா என்பதுதான்  “மிஸ் ஷெட்டி-மிஸ்டர் பொலி ஷெட்டி” படத்தின் மீதி கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் அனுஷ்கா தன் அனுபவம் வாய்ந்த நடிப்பால் அனைவரையும் கவருகிறார். கதாநாயகனை கட்டி அணைக்காமல், பாடல்களுகேற்றவாறு ஆடிபாடாமல், கவர்ச்சி உடையில் தாராளம் காட்டாமல் தன் திறமையான நடிப்பால் நம்மை கவருகிறார். படத்தில் ஸ்டாண்ட் ஆப் காமெடியன்  நவீனை பார்த்ததும் அவர்தான் சரியான நபர் என முடிவு செய்து அவரது அனுமதி பெறுவதற்காக நவீனையே அனுஷ்கா சுற்றி சுற்றி வரும்போது. அவரது பேச்சு, பழகும் விதத்தை பார்த்து அனுஷ்கா மீது நவீன் காதல் என்று சொல்லும்போது அனுஷ்கா தனது எதார்த்தமான நடிப்பில் அசத்துகிறார்.அவர் அழும் காட்சியில்  நம்மையும் அழ வைக்கிறார்  அப்படி ஒரு உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை ரசிக்க வைக்கிறார் அனுஷ்கா.

கதநாயகனாக நடித்திருக்கும் நவீன் பொலிஷெட்டி, துடிதுடிப்பான ஒரு இளைஞராகமிக சிறப்பாக நடித்து இருக்கிறார். அனுஷ்கா வயதில் தன்னை விட மூத்தவர் என்பதால், அவர் மீது ஏற்பட்ட காதலை தனது பெற்றோரிடம் வெளிப்படுத்தும் விதம் ரசிக்க வைக்கிறது. திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அனுஷ்காவின் முடிவை வேறு மாதிரியாக புரிந்துக்கொண்டு அவர் தனது பெட்ரூமில் செய்யும் அலப்பறை அனைவரையும் ரசிக்க வைக்கிறது.

இப்படத்தில் முரளிசர்மா, துளசி உள்ளிட்டோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும்பலம் சேர்த்திருக்கிறது. லண்டன் காட்சிகள் மற்றும் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் நம் கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருப்பதை பாராட்டலாம்.

ரதனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும், பின்னணி இசையிலும் குறைவைக்காமல் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

மகேஷ் பாபு .கே கதையை எவ்வளவு நேர்த்தியாக சொல்ல.முடியுமோ அவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருந்தாலும், புதிய கதையாக கிடைக்குமா? என்று  தேடுபவர்கள் தற்போது வெளிநாடுகளில்  வாழ்வு முறைக்கு ஏற்ப எடுக்கப்படும் படங்களைப் பார்த்து பாதிப்புக்கு ஆளாகி அதேபோல் இந்திய மொழிகளிலும் படம் இயக்குவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நமது கலாச்சாரத்திற்கு ஏற்ப அனைவரது வாழ்க்கையிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியமானது என்பதை கடைசி கட்ட காட்சியில் சொல்லியிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.

மொத்தத்தில், “மிஸ் ஷெட்டி , மிஸ்டர் பொலி ஷெட்டி” –தற்போதுள்ள இளம் வயதினர் பார்த்து ரசிக்க வெண்டிய படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.