விதார்த்-லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி இணைந்து நடிக்கும் படத்தை T. விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார்!

163

சென்னை.

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் T. விஜய ராகவேந்திரா கொரில்லா, மசாலா படம் மற்றும் அருண் விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள  பார்டர் என மிகச்சிறந்த  படங்களை தயாரித்துள்ளார், தற்போது அந்த வரிசையில் விதார்த் , கருணாகரன் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் நடிப்பில்  புதிய படத்தை  தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான தலைப்பு  இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனை “உறுமீன்” படப்புகழ் இயக்குனர் சக்திவேல் பெரியசாமி  எழுதி இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு  இன்று காலை  எளிமையான பூஜையுடன் துவங்கியது.

இயக்குனர் சக்திவேல் பெரியசாமி இப்படம் குறித்து கூறியதாவது…

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் சிந்தனையை தூண்டும் வகையில் உருவாகும் படைப்பு. தற்காலத்திய பிரச்சனைகளை சுற்றி நடக்கும் கதையென்பதால்  ரசிகர்களின் எளிதாக உணரும் வகையில் தங்களுடன் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையில் இருக்கும்.  இந்தப் படத்தின் திரைக்கதையை  எழுதி முடித்த போது,   மக்களை கவரும்  ஒரு பிரபல  நடிகர் இக்கதைக்கு  தேவைப்பட்டார். கமர்சியல் சினிமாவையும் கருத்து மிகுந்த படங்களையும் இணைக்க ஒரு பாலமாக இருக்கும் நடிகரும் தேவைப்பட்டது. அந்த வகையில் பார்க்கும்போது,  முதலில் மனதுக்கு வந்தவர் நடிகர் விதார்த் மட்டும் தான். எனக்கு நிச்சயமாக தெரியும் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்று தரும். லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை, தான் ஏற்கும் பாத்திரங்களில், எந்த ஒரு பெரிய மெனக்கெடல் இல்லாமல் வலிமையான காட்சிகளில் கூட, மிகவும் சுலபமாக நடிக்க கூடிய நடிகை. இந்தப் படம் அவருடைய திரை வாழ்க்கையில்  சிறந்த படமாக அமையும். கருணாகரன்   நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பை, உள்வாங்கி சிறப்பாக நடிக்கும் ஒரு நடிகர்.அவரது நடிப்பு திறனை வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நிரூபித்துள்ளார்.  இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் திரைக்கதைக்கு  பெரிய அளவில் வலு சேர்க்கும் வண்ணம் மிக ஆழமாக  அமைந்துள்ளது. “டெடி மற்றும் 90 எம் எல்” படங்களில் நடித்துள்ள நடிகை மசூம் ஷங்கர், இந்தப் படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சரித்திரன் தமிழகத்தின் பெரும்பான்மை  வீடுகளில்  ஒரு நகைச்சுவை நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர், ரேடியோ, தொலைகாட்சி மற்றும் இணைய தளம் வழியாக மக்களை மகிழ்வித்து வருபவர் , அவர் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  T . விஜய ராகவேந்திரா கூறியது…

எங்களது தயாரிப்பில் அருண் விஜய் அவர்களது நடிப்பில் உருவாகிவரும் “ பார்டர் “ திரைப்படம், விரைவில் உலகளவில் தியேட்டர் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது.  இந்த காலகட்டதில், இந்த படத்தின் கதையை கேட்டபோது, எனக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை  தந்தது, உடனடியாக இப்படத்தை தயாரிப்பதென்று முடிவெடுத்துவிட்டேன், அது மட்டுமல்லாது எனது நண்பர் சக்திவேல் அவருக்காகவும் இதை தயாரிக்க வேண்டும் என உறுதியாய் இருந்தேன். இந்த படத்திற்காக ஒரு சிறந்த குழு அமைந்தது மிகுந்த மகிழ்ச்சி. . இந்த படம் அமைவதற்கு காரணமாகவும், எந்த வித தடையுமில்லாமல் இந்த படம் ஆரம்பிப்பதற்கு உதவியாகவும் இருந்த செந்தில் அவர்களுக்கு, இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது, குறுகிய காலத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். படத்தை 2022-ம் ஆண்டின் துவக்கத்தில் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.