நடிகர் ருத்ரா நடிப்பில் உருவான ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா!

138

சென்னை.

ஏழை ரசிகர்கள் தர்ற பணம் தான் உங்களை கோடிஸ்வரர்கள் ஆக்குகிறது ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கதாநாயகர்களை சரமாரியாக கேள்விகேட்ட தயாரிப்பாளர் K.ராஜன். நபீஹா  மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ”  என்று பெயர் வைத்துள்ளனர். நடிகர் ருத்ரா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. படக்குழு உள்பட விழாவில் பல்வேறு திரை பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் பேசியதாவது,

“இப்படியொரு அருமையான விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆர்.வி உதயகுமார், பேரரசு போன்றோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அவர்கள் துறையில் வெற்றிபெற்றவர்கள்.இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். ஏன் என்றால் உழைத்து வெற்றிபெற்றவர்கள் எல்லாம் உங்களை வாழ்த்த வந்திருக்கிறார்கள். ஒரு படம் எடுப்பது மிகவும் சிரமமான வேலை. நிறைய சிரமங்களைத் தாண்டி இப்படியொரு அருமையான படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். ஒரு படத்தின் ரிலீஸுக்கு முன்னாடியே அந்தப்படத்தின் வெற்றியை நாம் சொல்லிடலாம். இந்தப்படம் நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறது. படம் எடுப்பது சாதாரணமானதில்ல. படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இனி படத்தின் கதாநாயகி பட ப்ரமோஷனுக்கு வரவேண்டும் என்று அக்ரிமெண்ட் போடுங்கள். ” என்றார்

நடிகர் ரவிமரியா பேசியதாவது,

“சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். நம் சகோதரர் ருத்ரா அவர்கள் மிகப்பெரிய ஹீரோவாக வருவதற்கு இறைவனை வேண்டுகிறேன். சக்கரை தூக்கலாய் புன்னகை படம் பெரிதாக வெற்றிபெறவேண்டும். ஏன் வெற்றிபெற வேண்டும் என்றால் இந்த மாதிரியான சின்னப்படங்கள் வெற்றிபெற்றால் தான் சிறுபட தயாரிப்பாளர்கள் நிறைய வருவார்கள். அதற்காகவே இப்படம் வெற்றிபெற வேண்டும்” என்றார்

படத்தின் கதாநாயகன் ருத்ரா பேசியதாவது,

“அனைவருக்கும் வணக்கம். முதலில் என் அம்மா அப்பா டீச்சர்ஸ், இப்படியொரு நல்ல சந்தப்பர்த்தைக் கொடுத்த கடவுள் எல்லாருக்கும் நன்றி. என்னோட அம்மா  ரொம்ப ஆசைப்பட்டார் நான் நடிகன் ஆகணும்னு. இப்ப என்  அம்மா இல்லை.  மிஸ் யூ அம்மா. சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை இதுவந்து எனது இரண்டாவது திரைப்படம். இந்தப் பிஸி செட்டியூலிலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மீடியாதான்.  மீடியா நண்பர்களுக்கு நன்றி. இன்றைய ஹீரோ மியூசிக் டைரக்டர். படத்தில் மூன்று பாட்டு பண்ணிருக்கார். அவர் எனக்குச் சகோதரர். பாடலாசிரியர் கட்டளை ஜெயா அவர்கள், கொரியாகிராபர் இவர்கள் எல்லாரின் டெடிகேசனும் ரொம்ப முக்கியம். இந்தப்படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கோம். லொக்கேசன்கள் எல்லாமே காடுதான். காட்டு மிருகங்கள் உள்ள இடங்கள் தான். வண்டிபோக வசதி கிடையாது. ரொம்ப கஷ்டப்பட்டோம். So படத்தில் பங்குபெற்ற எல்லாருக்கும் மிக்க நன்றி” என்றார்

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது,

“இப்படத்தின் நாயகன் ருத்ராவின் தந்தையை வாழ்த்தி வரவேற்கிறேன். நான் இந்தப் பதினைந்து நாட்களில் மூன்று வித்தியாசமான படங்களின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். சிறுபடங்கள் வெற்றிபெறணும் என்பதற்காக ஆத்மார்த்தமான மனதோடு வாழ்த்த வர்றோம்.  நாங்க கஷ்டப்பட்டதெல்லாம் வேற. நான் கஷ்டப்பட்டது எல்லாமே சினிமா நல்லாருக்கணும் என்று தான். வ.உ.சிக்கு சிலை வைத்தது முதல் அவருடைய புத்தகங்களை நூலகத்தில் வைப்பது வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அற்புதமான விசயங்களை செய்திருக்கிறார். இந்தப்படம் வெற்றிபெற்று அசல் தேறினாலே போதும். தயாரிப்பாளர் ரகுமான் அண்ணன் உடனே ரெண்டு படத்தை அறிவிச்சுடுவார். 50 கோடி 100 கோடி வாங்குற ஹீரோக்களை கேட்கிறேன். நீங்க வாங்குற காசு எல்லாம் சினிமாவுக்கு வந்திருக்குதா. உங்களால இந்த தமிழ்நாட்டுக்கு என்ன பயன்? ஏழை ரசிகர்கள் தர்ற பணம் தான் உங்களை கோடிஸ்வரர்கள் ஆக்குகிறது. இங்கே ஒரு தமிழ்நடிகை அழகாக சேலை கட்டி வந்திருக்கிறார். இதே ஒரு நார்த் பொண்ணு என்றால் எப்படி வருவார்கள்? நம் படங்களில் தமிழ் பெண்களையே நடிக்க வையுங்கள். நாம் எல்லாரையும் சிரிக்க வைக்கவேண்டும். சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை இலக்கிய நயமிக்க ஒரு டைட்டில். நடிகர் ருத்ரா மலையாளி தான். ஆனால் துணிச்சலாக தமிழ்படம் எடுத்திருக்கிறார். உலகத்தொழில் அமைப்புகளை எல்லாம் நம் தமிழக  முதல்வர் இங்கு அழைத்து வருவதைப் போல மற்றவர்கள் படம் எடுக்க வருவதற்கான அனுமதி பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும்.  சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை பெரிய வெற்றிபெற வேண்டும்” என்றார்.

விழாவில் கலந்துகொண்ட  சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக, இணையதள நண்பர்களுக்கு மக்கள் தொடர்பாளர் மணவை புவன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.