என்னை அழுகை கதாநாயகியாகவே நடிக்க வைத்து விட்டார்கள்! நடிகை ரேகா பேச்சு!

149

சென்னை.

திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான எம்.ஜி. வல்லபனின் பேத்தி ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் வாணி மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா கலந்து கொண்டு ஆதிராவை வாழ்த்திப் பேசினார்.

அப்போது அவர் பேசும்போது,

“நான்  பரதநாட்டிய நிகழ்ச்சிகள்  உட்பட நிறைய நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். ஒரு முழு நிகழ்ச்சியும் ஒரு நிமிடம் கூட கவனம் சிதறாமல் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தது இந்த ஆதிராவின் நடன நிகழ்ச்சியைத் தான். நீங்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தால் பார்க்க அழகாக இருக்காது. ஆனால் அவள் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை புன்னகை புரிந்து கொண்டே இந்த நடனத்தை ஆடினாள். கொஞ்சம் கூட அவளது ஆற்றலின் அளவு குறையவில்லை. அப்படிச் சிரித்துக்கொண்டே  ஆடிய நடனம் அவ்வளவு அருமையாக இருந்தது. அதை நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். ரசிக்க ரசிக்கத்தான் கலைஞர்கள் வளர்வார்கள் .நாம் வளர வேண்டுமென்றால் நம்மை யாராவது ஊக்கப்படுத்தி, தூண்டுதலாக இருக்க வேண்டும்.

ஆதிராவுக்கு அமைந்துள்ள பெற்றோர்  கடவுள் தந்த பரிசு.அவள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை. துளிக்கூட பதற்றமில்லாமல் சலனமில்லாமல் சபையை கவர்ந்து கொண்டு முழு நம்பிக்கையுடன் அவள் ஆடிய நடனம் மிகப் பிரமாதம். இசைக்குழுவின ரும்  ஒரு  துளியளவு கூட பிழை நேராமல் துல்லியமாகப் பாடி அவள் நடனத்தை உயர்த்திப் பிடித்தார்கள். நான் வந்து அமர்ந்தது முதல் முழு நிகழ்ச்சியையும் அனுபவித்து ரசித்தேன். இந்த அரங்கம் முழுமையாக நிரம்பி இருக்க வேண்டும். இந்தக் கொடிய தொற்றுக் காலத்தில் இவ்வளவு பேர் வந்திருந்ததில் மகிழ்ச்சி. நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் இந்த சூழலில் இருந்து நாம் மீளவேண்டும் என்று.

ஏதாவது கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கே நர்த்தகி நடராஜ் அவர்கள் பேசினார்கள். நானும் கே.ஜே.சரசம்மாவிடம் நடனம் கற்றுக்கொள்ளப் போனேன். மூன்று நான்கு மாதங்கள் தான் போயிருப்பேன். அலாரிப்பு வரை போனேன் .அதன்பிறகு அரைமண்டியில் உட்கார் என்றார்கள்.  எங்கே அரைமண்டியில் உட்கார்வது? அதற்குமேல் படங்களில் பிசியாகி விட்டேன்.படங்களில் கிளிசரினைக் கொடுத்து என்னை அழுகை கதாநாயகியாகவே தொடர்ந்து நடிக்க  வைத்து விட்டார்கள். பரதநாட்டியம் கற்றுக் கொள்ளும்போது நாம் ஒரு சிற்பமாக மாறிவிடுவோம்.அதில் சிறு தவறு ஏற்பட்டாலும் எல்லாமே வீணாகிவிடும்.எனவே நான் படங்கள் தொடர்ந்து நடித்ததால் அலாரிப்புடன் என் நடனப் பயிற்சி  முடிந்தது.
அந்த நடனத்தைத் தொடர முடியவில்லை.  இப்போது நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. நீண்ட நாள் கழித்து அந்தப் பழைய நினைவுகள் இப்போது எனக்கு வந்து விட்டன. நமக்குத் தட்டிக் கொடுக்கவும் ஊக்கப்படுத்தவும்  யாராவது ஒருவர் உடன் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த கொரோனா காலகட்டத்தில் வெளியே செல்லாதீர்கள் என்று  ரொம்பவே பயமுறுத்துகிறார்கள். எனவே நான் எங்கும் வெளியில் செல்லாமல் இருந்தேன். அப்படிப்பட்ட சூழலில் இங்கே வந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.

என் மகள் நியூயார்க்கில் படித்து முடித்து விட்டு இப்போது வேலையில் சேர்ந்திருக்கிறாள். அங்கே மகளைத் தனியே விட்டுவிட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக விசா கிடைக்காமல் நாங்கள் கணவன் மனைவி மட்டும் இங்கே தனியே இருக்கும்போது வருத்தமாக இருந்தது.சரி ஒரு பதினைந்து நாள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வரலாம் என்று நினைத்தேன் . பிக்பாஸில் நடப்பது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு பதினைந்து நாள் போய்விட்டு வந்தேன்.அது முடிந்தவுடன் குக் வித் கோமாளி போய்விட்டு வந்தேன்.

பிக்பாஸில் அந்த நூறு நாட்களும் சூழல்களைத் தூண்டிவிட்டு ஒரு பரபரப்பை உருவாக்குவார்கள்.உதாரணமாக சனமாக இருக்கட்டும் வேறு யாராகவும் இருக்கட்டும், நான் தான் சமைக்கிறேன் என்று சொன்னேனே என்று சண்டை போடுவது வரை பாருங்கள்,அதுதான் மக்களுக்குப் பிடிக்கிறது. எனவேதான் சண்டைபோடும் சூழ்நிலைகளை உண்டாக்குகிறார்கள். அடிக்கடி சண்டைகள் நடக்கும் ,வெள்ளிக்கிழமை  மீண்டும் சேர்ந்து கொள்வார்கள்.சனி ஞாயிறு மாறிவிடுவார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும்.

பிக்பாஸ் மூலம் ஒரு நூறு நாட்கள்தான் பிரபலமாக இருக்கமுடியும். பிக்பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது.ஆனால் வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம். அங்கே போன் கிடையாது, பேப்பர் கிடையாது, யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த நிலையில் யாரும் பொறுமையாக இருந்து காண்பிக்க வேண்டும். நான் 15 நாட்களும் பொறுமையாக இருந்தேன் .என் மீது நிறைய பேருக்குப் பொறாமை இருந்தது எல்லாம் சாதித்துவிட்டு வந்திருக்கிறார் என்று.

நான் சொல்வேன் சாதித்த பிறகுதான் மிகவும் அர்ப்பணிப்புடன் பொறுமையாக இருக்க வேண்டும் என்று. நான் நடித்த படங்களில் எல்லாம் படப்பிடிப்புகளுக்குச் சரியான நேரத்தில் சென்று பொறுமையாக இருந்ததால்தான் இதை என்னால் செய்ய முடிந்தது.ஆனால் பொறாமை எண்ணங்களோ கர்வமோ இருக்கக் கூடாது. ‘நான் இவ்வளவு பெரிய ஆள், நான் ஏன் 17 பேருக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டும்?’ என்றெல்லாம் நினைக்கக்கூடாது.அதையெல்லாம் நான் நினைக்காமல் அந்த வாழ்க்கையை உற்று நோக்கிப் பார்த்தேன்.

நாம் எப்போதும் சும்மா இருக்கக்கூடாது  இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.அது போல எப்போதும் நம்முடைய நம்பிக்கையைக் கைவிடக்கூடாது.கண்ணாடியில் பார்த்து நம்முடைய அழகையும் பராமரிக்க வேண்டும்.அதுதான் நமது பலம்.எப்போதும் நான் இளமையாக உணர்வேன். அதனால்தான் நான் ஒரு யூடியூப் சேனல் (ரேகாஸ் டைரி ) தொடங்கியிருக்கிறேன். ஆனால் எட்டு  கோடி பேர் இருக்கும்போது 45 ஆயிரம் பேர் மட்டும் தான் பார்க்கிறார்கள் என்று வருத்தமாக இருந்தது. அதற்குப்பிறகு கூகுளில் தேடிய போதுதான் ’எந்த விஷயத்திலும் தோல்வியில் துவளாதீர்கள்.தோல்வியில்தான் உங்களுக்கு இருக்கிறது வெற்றி’ என்று இருந்ததைப் பார்த்ததும் நான் சமாதானம் அடைந்தேன். நான் எப்போதும் இளமையாக இருப்பதாக உணர்வதால் தான் இந்த 2000 கிட்ஸ்- தலைமுறையுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறேன். ஆதிராவின் பெற்றோர்கள் அவளை  நன்றாக ஊக்கப் படுத்தி இருக்கிறார்கள் .பெற்றவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பிள்ளைகளிடம் தாங்கள் இஷ்டப்பட்டதைத் திணிக்கக்கூடாது.  பிள்ளைகளிடம் தானாகக் கற்றுக்கொள்ள விருப்பம்  வரவேண்டும்”என்று கூறி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில்  சமர்ப்பணா அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் இயக்குநர்
‘நாட்டிய சங்கீத கலா பாரதி’ சுவாமிமலை கே .சுரேஷ் இன்னொரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஆதிராவின் நடன ஆசிரியர் கள்  என். செந்தில் குமார் ,மைதிலி, பத்மாவதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.விழாவில் ஆதிராவுக்கு மிருத்யகலா நர்த்தகி பட்டம் வழங்கப்பட்டது. இந்த நாட்டிய நிகழ்ச்சிக்கான இசைக்குழுவில் வாய்ப்பாட்டு சித்ராம்பரி கிருஷ்ணகுமார், நட்டுவாங்கம் என். செந்தில்குமார் ,மிருதங்கம் தனஞ்செயன், வயலின்  சிகாமணி ,புல்லாங்குழல் சுருதிசாகர், வீணை அஞ்சனா சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை  ஆதிராவின் பெற்றோர் அர்ச்சனா , பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர்.