நடிகை நயன்தாராவை, அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு!

169

சென்னை.

நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து இருப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.  ஏற்கனவே நயன்தாரா சிம்பு, பிரபுதேவா இருவரது காதல் வலையில் வீழ்ந்து ஏமாற்றம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதனால் வெறுத்துப் போய் இருந்த சூழ்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு ஆறுதல் சொல்லி அன்புடன் பழகினார். இந்த பழக்கம் பிறகு காதலாக மாறியது. இவர்களது காதல்  ஆறு ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

தற்போது விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்தி கசிந்துள்ளது. தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படத்தில், நயன்தாரா நெற்றியில் குங்குமத்துடன் இருப்பதை போன்று புகைப்படம் வெளியாகி இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர்களின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இவர்களின் திருமணம் நடைப்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.