‘அக்கா குருவி’ போன்று நல்ல படங்கள் இயக்குவதற்கு இங்கு நிறைய சிக்கல்கள் உள்ளது – இயக்குனர் அமீர்!

123

சென்னை.

இயக்குனர் சாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைக்க 8 பேர் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் அக்கா குருவி. புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய Children of Heaven என்ற மாபெரும் வெற்றிபெற்ற பெர்ஸியன் திரைப்படத்தின் மறுஉருவாக்கம் தான் அக்கா குருவி. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படகுழுவினர்கள் பேசியதாவது:

இயக்குனர் அமீர் பேசியபோது,

இயக்குனர் சாமி அவர்களுக்கும் எனக்கும் தொழில் ரீதியாக பெரிய நட்புறவு என்று எதுவும் கிடையாது. இந்த விழாவிற்கு வருகை தரவேண்டும் என்று கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அழைத்திருந்தார். அப்போது என்ன படம் இயக்கியுள்ளீர்கள் என்று கேட்டபோது, உயிர், மிருகம் படங்களை இயக்கியுள்ளேன் என்றார். நான் உயிர் படத்தை மட்டும் பார்த்துள்ளேன். மற்ற படங்களை பார்க்கக் கூடிய சூழல் இல்லை. இந்த விழாவிற்கு நான் வந்ததன் காரணம் சாமி என்கின்ற படைப்பாளியை விட சாமி இயக்கியுள்ள படைப்பிற்காக வருவது தான் என்னுடைய முதல் நோக்கம். “Children of Heaven” என்ற திரைப்படம், உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்ட ஒரு திரைப்படம். மஜித் மஜிதி என்ற இயக்குனர் உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமாவையும் தன் காலடியில் கொண்டு வந்து புரட்சி செய்த ஒரு இயக்குனர். Children of Heaven படத்தை பார்க்காதவர்கள் சினிமாவில் இல்லை. அனைவரும் பார்த்திருப்பார்கள்.

இந்த படத்தை பற்றி இசைஞானி இளையராஜா இது போன்ற படங்களை ஏன் இங்கு எடுப்பதில்லை என்று ஒரு கேள்வியை கேட்டார். அதில் சில சிக்கல்கள் உள்ளது, இது போன்ற நிறைய திரைப்படங்கள் உள்ளது. அதை எல்லாம் இயக்க வேண்டுமென்றால், இயக்குனரே கதை, வசனம், திரைக்கதை, போன்று என்னவெல்லாம் உள்ளதோ அது அனைத்தையும் பார்ப்பவராக இருக்க வேண்டும். அப்போது தான் தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தர தயாராகவுள்ளனர். இல்லை கதை வேறு ஒருவருடையது, இயக்கம் மட்டும் தான் நான் என்று சொன்னால், அதற்கு நான் எழுத்தாளரை வைத்தே இயக்கிவிடுவோமே தனியாக இயக்குனர்கள் எதற்கு? என்று இது போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

குறிப்பாக முதல் படம் இயக்கும் ஒரு இயக்குனருக்கு அந்த படம் வெற்றி அடைந்துவிட்டது என்று சொன்னால் அவர் அடுத்து எடுக்கும் படம் ரீமேக் படமாக இருந்தால் அதை யாரும் விரும்புவதில்லை. பத்திரிகையாளர்களே கேலிக்குரிய ஒரு விஷயமாக கிண்டலடித்து விடுகிறார்கள். ஆனால், அண்டை மாநிலமான தெலுங்கு, பிற மாநிலமான ஹிந்தி மொழி படங்கள் பெரிய ஹிட் மாஸ் ஹிட் என்று செய்தி வந்தால், அதே படத்தை இங்குள்ள ஒரு பெரிய ஹீரோவை வைத்து ரீமேக் செய்தால், அந்த படத்திற்கு கிடைக்கும் ஆதரவு, விளம்பரம், வரவேற்பு அனைத்தும் அதிகமாக இருக்கும். ஆனால், இது போன்ற கலைப் படங்களை இயக்குவது கத்தி மீது நடப்பது போல் இருக்கும். அந்த படத்தின் தரம் குறையாமல் நம் மண்ணின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு இயக்க வேண்டும். அதே படத்தை இயக்கி தோல்வியடைந்து விட்டால் இயக்குனர் பெரும் விமர்சனத்திற்கு ஆளாவார்கள்.

‘Children of Heaven’ போன்று 20க்கும் மேற்பட்ட படங்கள் ரீமேக் செய்வதற்கு தயாராக உள்ளது. ஆனால், இது போன்ற அச்சுறுத்தல்கள் தான் அதை தடுக்கிறது. ஆனால், அந்த வகையில், மனமதிருந்திய மைந்தனாக சாமி இருக்கிறார். அவரின் முந்தைய படங்கள் சர்ச்சைக்குரிய படங்களாக இருந்ததால் அவர் இந்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் சரியான பாதையை தேர்ந்தெடுத்தாரா என்பதை விட அவர் சரியான படத்தை தேர்வுசெய்துள்ளார் என்பதே மறுக்க முடியாத உண்மை. மிக முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வணீக ரீதியாக வெற்றியடைய வேண்டும் என்பது தான். இந்த படத்தில் பணியாற்றிய குழந்தைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்…என்றார்.

இயக்குனர் இரா.பார்த்திபன் பேசியபோது,

இங்குள்ள அனைவரும் பேசியதும் வீண், நான் பேசப்போவதும் வீண், இந்த படத்தை பார்த்து அதை பற்றி பேசிய குழந்தைகள் தான் உண்மையை பேசியவர்கள். பெரியவர்கள் அனைவருமே ஒருவர் பேசியதை விட மற்றொருவர் சிறப்பாக பேச வேண்டும் என்று நினைப்பார்கள். நான் உட்பட அப்படித்தான். சமீபத்தில் கூட ஒரு படத்தின் விமர்சனங்களின் போது பெரியவர்கள் அனைவரும் அழகாக பேசினார்கள். ஆனால், சிறுவன் ஒருவன் சொன்ன கேடித்தனமான கருத்து தான் வைரல் ஆனது. ஏனென்றால், அவன் சொன்னது மிகவும் யதார்த்தமாக இருந்தது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால் அது போன்ற குழந்தைகளின் விமர்சனம் தான் இந்த படத்திற்கான சரியான விமர்சனம். நான் ஆரம்பத்தில் சொன்னது போல் அனைவர் பேசியதும் வீண் தான். சமீபத்தில் கூட பர்வீன் சுல்தானா அவர்கள் அமீரை ஒரு பேட்டி எடுக்கிறார். அதில் அவர் கேட்ட ஒரு கேள்விக்கு அமீர் ஒரு சிரிப்பை மட்டுமே சிரித்தார். அந்த சிரிப்பில் சுமார் ஒரு 1500 அர்த்தங்கள் அடங்கியிருக்கும் ஒரு பூங்கொத்து போல. நானும் அவரின் பேச்சிற்கு ரசிகன் தான். இன்றும் அழகாக பேசினார். நிறைய தேவையான விஷயங்களை கூறினார்.

எதற்காக நல்ல படங்களை இயக்குவதற்கு யாரும் முன்வரவில்லை என்பதற்கு அழகாக பேசினார். நான் ‘உள்ளே வெளியே’ என்று ஒரு படத்தை இயக்கினேன் அதற்கு காரணம் நான் இயக்கிய ‘சுகமான சுமைகள்’ படம் தான். நான் அதை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்பதற்காக மிகவும் ஒழுக்கமாக இயக்கினேன். ஆனால், அதை என் குடும்பம் மட்டுமே பார்த்தது. அந்த படத்தால் நான் 75 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தேன். அது நான் சம்பாதித்த பணம் இல்லை. சம்பாதிக்க போகும் பணத்தையும் சேர்த்து போடப்பட்ட பணம். அந்த பொருளாதார பிரச்சனை.. நம் வாழ்க்கையிலேயே விளையாட ஆரம்பித்து விட்டது. எனக்கு தெரிந்து ரஹ்மான் சார் சொல்வது போல் இரண்டு பாதை உள்ளது. ஒன்று காதல் மற்றொன்று வெறுப்பு. அதில் நாம் தேர்தெடுக்க வேண்டியது காதலை தான் என்பார். அது போல, தேர்ந்தெடுத்தலே மிக முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்.

அதை இயக்குனர் சாமி அவர்கள் தேர்ந்தேடுத்தது CHILDREN OF HEAVEN. அதை விட சிறந்த தேர்வு இசைஞானி இளையராஜா. ஒரு ஏழு நல்ல இதயங்கள் சாமி அவர்களை இயக்குனர்களாக தேர்வு செய்துள்ளனனர். இதற்கான விளைவு, அமீர் சொன்னது போல் இந்த படத்தை எவ்வளவு குறையாக இயக்கியிருந்தாலும், அது குறையாக இருக்காது. சாமி என்னுடன் பணிபுரிந்தவர் என்பது இந்த படத்தை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இதற்கு முன்னதாக இவர் இயக்கிய படங்களை பார்க்கும் பொழுது, பொறாமையாக இருக்கும் ஐவரும் இது போன்ற சர்ச்சையான படங்களை இயக்குகிறார் என்பதனால். இயக்குனர் ஹச்.வினோதும் என்னுடன் உதவி இயக்குனராக சில காலங்கள் பணியாற்றியுள்ளார். அவர் அஜித் அஜித் என்று போகும் சமயத்தில், சாமி மஜித் மஜித் என்று போயிருக்கிறார். அவரின் சோர்விற்கு காரணம் அவர் இயக்குனராக மட்டுமல்லாமல், இப்படத்திற்கு தயாரிப்பாளராக இருப்பதும் ஒரு மிக முக்கிய காரணம். ஆனால், அவர் என்னை விட ஒரு படி மேல் தான். நான் ஒரு செருப்பை வைத்து படம் இயக்கினேன், இவர் இரண்டு ஷூவை வைத்து படம் இயக்கியிருக்கிறார்.

நான் ஒத்த செருப்பு படத்தை இயக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டேனோ, அது வெளியாகி ஓடிடி தளத்திற்கு சென்றவுடன் உலக பெருமையெல்லாம் கிடைத்தது. இப்போது கூட அமீர், நீங்கள் உங்கள் படத்தை வியாபாரம் செய்துவிட்டீர்களா என்று கேட்டார். யாரும் இது வரை என் வீட்டின் பக்கம் அல்ல தெருவின் பக்கம் கூட வரவில்லை என்று சொன்னேன். இந்த மாற்றங்கள் எப்போது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ‘இரவின் நிழல்’ படம் உள்ளே வெளியே படத்தை போன்றிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், எவ்வளவு காலம் தான் இந்த பொருளாதார சிக்கல்களை சமைப்பது என்று தெரியவில்லை. இயக்குனர் சாமிக்கு திடம் மிகவும் முக்கியமான ஒன்று. நான் முந்தைய காலத்தில் பல படங்களின் மூலம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால், நிறைவை தரும் படம் ‘இரவின் நிழல்’ மட்டும் தான். பாக்யராஜ் சார் படத்தை பார்த்தார். அந்த பாராட்டு என்பது எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது. அது போன்ற சந்தோஷத்தை சாமி உணருவார். இந்த படம் வெற்றியடையும் என்றார்.