நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் “O2” படத்தின் டிரைலர் வெளியீடு!

128

சென்னை.

தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம்  “O2” திரைப்படத்தை ஜூன் 17 அன்று பிரத்யேகமாக வெளியிடுகிறது.  இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைக்கும் பரபரப்பான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிகொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, பஸ்ஸில் மாட்டிக்கொண்ட மற்றொரு பயணியான காவல் அதிகாரி குறி வைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை பரபரப்பாக சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு திரில்லர் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர்.

வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குநர் விக்னேஷ் GS. பல கதைகள் எழுதினாலும், இயற்கையின் மீதான ஆர்வத்தாலும், மானுடம் மீதான அக்கறையாலும் ஆக்ஸிஜன் பின்னணியில் இந்தக் கதையினை உருவாக்கியுள்ளார். ஓ2’ கதையினை கேட்டவுடனே நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷை பாராட்டி, உடனடியாக இப்படத்திற்கு தேதிகள் ஒதுக்கி தந்துள்ளார். மேலும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும் இந்தக் கதையினைக் கேட்டுவிட்டு புதுமையான களமாக இருந்ததால் உடனடியாக தயாரிப்பில் இறங்கியுள்ளது. இப்படத்தின் 70%-க்கும் மேலான காட்சிகள் பேருந்துக்கு உள்ளேயே  நடப்பதாக இருக்கும். இதற்கு தத்ரூபமாக தனது கலை வடிவமைப்பின் மூலம் வலுச் சேர்த்துள்ளார் கலை இயக்குநர் சதீஷ் குமார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளும் மிக சவாலானதாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக இப்படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் தரத்தை பல படிகள் உயர்த்தும் படைப்பாக இருக்கும்.

இத்திரைப்படம் ஜூன் 17 ஆம் தேதி பிரத்யேகமாக டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

நடிகர் அர்ஜுனன் கூறியதாவது.

இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் ஜாலியான ஒன்று. பேருந்து  காட்சிகளை எடுக்கும் போது, நாங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தோம், மிகுந்த சிக்கல்களுக்கிடையில் ஒரு செட்டில் வைத்து  ஒரு நல்ல படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விக்னேஷ். குழந்தை நடிகர் ரித்விக் இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். நீங்கள் படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும். நன்றி

நடிகர் ரிஷிகாந்த் கூறியதாவது…..

இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் பலருக்கு நன்றி கூற வேண்டும். நீங்கள் படத்தை பார்த்து உங்கள் விமர்சனங்களை கூறுங்கள். குட்டிபையன் ரித்விக் சிறப்பாக நடித்துள்ளார். எல்லோருக்கும் நன்றி.

இயக்குனர் மற்றும் நடிகர் பரத் நீலகண்டன் கூறியதாவது..

இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க காரணம் ஸ்டண்ட் இயக்குனர் தான். நான் இயக்குநராக அறிமுகமான பின் நடிகராக போய் நிற்பது புதுமையாக இருந்தது. நயன்தாரா முன் நான் நடித்தது வித்தியாசமான அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த இயக்குநருக்கு நன்றி. இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். படத்தின் செட் அமைப்பு அட்டகாசமாக இருந்தது. என்னுடன் நடித்தவர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்,,

பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைவது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் தான் படத்தின் இசை சிறப்பாக வர காரணம். நயன்தாரா தான் படத்தின் ஆக்சிஜன். ரித்விக் மற்றும் பரத் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இந்த குழுவுடன் பணிபுரிவது பெருமையான விஷயம். இயக்குனர் சுவாரஸ்யமான படத்தை உருவாக்கியுள்ளார். எடிட்டரின் பணியை பார்த்தபின் நான் அவரது ரசிகர் ஆகிவிட்டேன்.  படத்தின் சுவாரஸ்யதிற்கேற்ப இசையமைத்துள்ளோம். எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

ஒளிப்பதிவாளர் தமிழ் A அழகன் கூறியதாவது…

எங்களது குறும்படத்திற்கு கெஸ்ட் ஆக வரும் பிரபு சார் உடன் நாங்கள் இந்த படத்தில் பணியாற்றியது சந்தோஷமான அனுபவம். படத்தின் கதையை எனக்கு கூறிய போது, இது சவாலான ஒன்றாக இருக்கும் என எனக்கு தெரியும். அதற்கு பலர் உழைத்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடைய படங்கள் எப்போதும் சிறப்பானதாக இருக்கும். அந்த வகையில் எங்கள் படமும் அப்படி இருக்கும் என நம்புகிறோம். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படப்பிடிப்பு சவாலான ஒன்று. நாங்கள் செய்யும் சோதனை முயற்சிகளுக்கு எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த நயன்தாரா அவர்களுக்கு நன்றி. மிகவும் ஈடுபாட்டுடன் இந்த திரைப்படம் எடுத்துள்ளோம். நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

இயக்குனர் விக்னேஷ் GS  கூறியதாவது…

இந்த கதையை குறுகிய காலத்தில் முடிக்க காரணம் தயாரிப்பாளர் தான். இந்த கதையை உள்வாங்கி அதற்கேற்ற வகையில் ஆக்‌சன் இயக்குநர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் தமிழ் இந்த படத்திற்கு பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். படம் சிறப்பாக மாற காரணம் எடிட்டர். இந்த கதை வித்தியாசமான ஒன்று. அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது தயாரிப்பாளர்கள் தான். நயன்தாரா மேடம் சிறப்பான நடிகை, அவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அவர் என் மேல் முழு நம்பிக்கையையும் வைத்திருந்தார். அவர் தான் இந்த படத்தின் ஆக்சிஜன். இந்த படம் ஒரு குழுவாக உருவாக்கப்பட்டது. இந்த படம் வலிமையான  பெண்களுக்கு சமர்ப்பணம். அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் SR பிரபு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கூறியதாவது…

பிரியாணி படத்தின் போதே ஒளிப்பதிவாளர் தமிழ் எனக்கு தெரியும். அவர்தான் இயக்குநரை அறிமுகம் செய்தார். இந்த படத்தின் கதை சுவாரஸ்யமானது. ஒரு தேடல் இந்த கதையில் இருந்தது. படம் எடுக்கலாம் என முடிவெடுத்த பின் இயக்குனர் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் எனக் கேட்டார். அதற்கு நயன்தாரா அவர்களும் ஒத்துகொண்டார். அவர் இதுபோன்ற கதையில் நடிக்க முடிவெடுத்தது பெரிய விஷயம். இந்த படத்தின் கதையை கேட்டபோதே கலை இயக்குனர் சதீஷ் தான் சரியாக இருப்பார் என முடிவெடுத்தோம். அவரும் நல்ல பணியை செய்து கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் அனைவரும் இயக்குநர் நண்பர் என்பதற்காக பெரிய உழைப்பை போட்டுள்ளனர். இந்த படத்தின் கதையை ஒட்டி இசையை சிறப்பாக உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர். குறைந்த நடிகர்கள் இருக்கும் இந்த கதையில், சிறப்பான ஆட்களையே தேடி தேடி போட்டுள்ளோம். இந்த படம் எங்களுக்கு திருப்திகரமாக வந்துள்ளது. இந்த படம் ஒடிடியில் வருவது நாங்கள் முன்னரே முடிவெடுத்த விஷயம். இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும். படம் பார்த்து நீங்கள் ஆதரவு தர வேண்டும். நன்றி.

உலகளவில் முன்னணி ஓடிடி தளமாக விளங்கும் டிஸ்னி+  ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி களத்தில், மிகப்பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது. உலகளாவிய கதைகளுடன், மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன், ஒரிஜினல் திரைப்படங்கள், புதுமையான இணைய தொடர்கள், ஸ்டார் நெட்வொர்க் சீரியல்களை தொலைக்காட்சியில் வெளியாவதற்கு முன்பாக திரையிடுவது, மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் நேரடி வெளியீடு என்ற பல்வேறு முறைகளில் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.