பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகும் படம் “குதூகலம்”

122

சென்னை.

எதார்த்தமான வாழ்க்கை,நிஜ சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை எப்போதுமே பெரும். அந்த வகையில், ‘அங்காடித்தெரு’, சமீபத்தில் ‘அசுரன்’ போன்ற   படங்களை மக்கள் கொண்டாடினார்கள்.  அதே போல் இப்போது, திருப்பூர் பனியன் தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நடக்கும் சம்பவம் முதன்முறையாக தமிழில் படமாக்கப்படுகிறது. இப்படத்திற்கு “குதூகலம்” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்தை ரெட் & கேட் பிக்சர்ஸ் (Rat & Cat Pictures) சார்பில் M.சுகின்பாபு முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த யதார்த்தமான கதையை உருவாக்கி, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார். உலகநாதன் சந்திரசேகரன். துரை செந்தில்குமார் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கிசட்டை’, ‘எதிர்நீச்சல்’ படங்களில் துணை இயக்குனராகவும், தனுஷ் நடித்த ‘கொடி’, ‘பட்டாசு’ போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.

ஒரு இளைஞன், தன் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக வரும் தடைகளை எப்படி எதிர் கொள்கிறான் என்பதே இக் கதை. இதை திருப்பூர் மாநகரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில் நடக்கும் சம்பவத்தை நகைச்சுவையுடன் உருவாக்குகிறார் டைரக்டர்.

இதன் கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ‘அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் கவிதாபாரதி, ‘விஜயடிவி’ புகழ், பியான், சஞ்சீவி, ‘நக்கலைட்’ யூ-ட்யூப் புகழ் அனிஸ், மன்மோகித், ‘மெட்டி’ பிரேமி, தயாரிப்பாளர் எம்.சுகின்பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருப்பூரில் படமாக்கப்படுகிறது.

இசை  :  பியான் சர்ராவ்,ஒளிப்பதிவு  :  மணி பெருமாள் (கும்கி சுகுமார்உதவியாளர்) எடிட்டர் : பிரகாஷ் மப்பு (கொடி, பட்டாசு) ஆர்ட்: L.கோபி – அறிமுகம் (ஆர்ட் டைரக்டர் துரைராஜ் உதவியாளர்)ஸ்டண்ட் : டேஞ்சர் மணி PRO: ஜான்சன்நிறுவனம் : ரெட் & கேட் பிச்சர்ஸ்

தயாரிப்பாளர் : எம்.சுகின்பாபு

.