இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்த ‘உறியடி’விஜய் குமார்!

113

சென்னை:

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சேத்துமான் திரைப்படம் வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் அடுத்து இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் உறியடி, உறியடி 2 படங்களை எழுதி, இயக்கி, நடித்தவரும், சூரரை போற்று படத்திற்கு வசனம் எழுதியவருமான விஜய் குமார் நடிக்கிறார். இதன் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் விஜய் குமார் இணைந்துள்ளார்.

கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாகவும்,  ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

96 படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வஸந்தா இசையமைக்கிறார்.CS பிரேம் குமார் எடிட்டராகவும், ஸ்டன்னர் சாம் சண்டை பயிற்சியாளராகவும், ஏழுமலை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனங்களை எழுதியுள்ளார்.