‘எமோஜி’ இணையத் தொடர் விமர்சனம்!

104

சென்னை:

இந்த காலத்தில் காதல், கல்யாணம், கற்பு சந்தோஷம், துக்கம், கோபம், ஏமாற்றம் ஆகிய எல்லாவற்றையும் இன்றைய உயர்தர வர்க்க இளைஞர்களும், இளம்பெண்களும்  எப்படி பெற்றோர்களுக்குத் தெரியாமல், வாழ்கிறார்கள் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தி அனைவரையும் அதிர வைத்திருக்கிறது ‘எமோஜி’ இணையத் தொடர்.

கதாநாயகனாக நடித்திருக்கும் மஹத் ராகவேந்திராவின் இளமையும், அழகும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தாலும் அவரது நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு சிம்புவை பின் தொடர்வது போலவே இருக்கிறது. ஒருமுழுநீளத் தொடரின் முழுமையான நாயகனாகி யிருக்கிறார் எதிலும் ஓர் அலட்சியத்துடன் செயல்படக்கூடிய உயர்மத்தியதர வர்க்க இளைஞன் வேடத்தை அழகாகப் பிரதியெடுத்திருக்கிறார் மகத்.பெண்களுடனான நட்பு, காதல், பிரிவு ஆகிய எல்லாவற்றையும் சந்திக்கக்கூடிய கதாபாத்திரம். நிதானமாக நடித்து நற்பெயர் பெறுகிறார்.

இரண்டு நாயகிகளில் முதன்மையாக இருக்கும் தேவிகாசதீஷ் அருமை. கேரள வரவான அவருடைய நடனமும் வில்லாய் வளையும் உடலும் நடிப்புக்கு அழகு சேர்த்திருக்கிறது.  அழகில் மட்டும் அல்ல நடிப்பிலும் அதிகம் கவனம் பெறுகிறார். கள்ளு குடித்துவிட்டு திருமண வீட்டில் அவர் செய்யும் அலப்பறை அவரது அல்டிமேட் நடிப்பு. கோலிவுட்டில் அம்மணிக்கு பெரிய எதிர்காலம் உண்டு., மகத்தின் மீது காதல் கொள்ளும் காட்சி ஆகிய இளமைதுள்ளும் காட்சிகளில் அசத்தும் அவர் அதே அளவுக்குப் , பிரிந்து செல்லும் கடைசிக்காட்சியில் உருக வைத்திருக்கிறார்.

இன்னொரு நாயகி மானசா செளத்ரி, என்னால் கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாது ஆனா காதலிக்கலாம் ஜாலியா இருக்கலாம் வா என எந்தவித விருப்பு, வெறுப்பு இல்aமல் சொல்லி அதுபோலவே செய்தும் காட்டுகிறார். இன்றைய இளம்பெண்கள் எவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு அவருடைய பாத்திரம் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

மகத்தின் நண்பராக வரும் வி.ஜே.ஆஷிக் அவ்வப்போது ராப் பாடல் பாடி கவனம் ஈர்க்கிறார். சிறு சிறு வேடத்தில் நடித்தவர்கள் கூட நம் மனதில் நிற்கும் அளவுக்கு கதையை கடந்து செல்கிறார்கள்.ஆடுகளம் நரேன், பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோரின் வாழ்க்கையும் இறுதியில் ஆடுகளம் நரேன் பேசும் வசனங்களும் மிகவும் முக்கியமானவை.

ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன், ஐடி இளைஞர்களின் ஆடம்பர வாழ்க்கையை நேர்த்தியாகவும், ஒவ்வொரு கதாபாத்திரங்களை அழகாகவும் காட்டியிருக்கிறார். இரண்டு நாயகிகளையும் அங்கம் அங்கமாகப் படம்பிடித்து காட்டி இளைஞர்களை கவர்ந்து  இழுத்து  இருக்கிறார்..

சனத் பரத்வாஜ் இசையில் இடம்பெற்ற பாடல்கள் இனிமை பாடல்கள் கேட்கலாம். பாடல்வரிகள் தற்போதைய இளம் தலைமுறைக்குத் தேவையானவை. பின்னணி இசையில்தான் வேகம் இல்லை. ஒரே மாதிரியாக இருக்கிறது.

கதை எழுதி இயக்கியிருக்கும் சென் எஸ்.ரங்கசாமி திரைக்கதையை தனித்துவமாகவும், காட்சிகளை அழகாகவும் வடிவமைத்திருப்பதோடு, இயல்பான வசனங்கள் மூலம் வெப்சிரீஸ்க்கு பலம் சேர்த்துள்ளார். வீட்டுக்குத் தெரியாமல் காதல் திருமணங்கள் செய்து கொண்டிருக்கும் பலர் இப்போது வீட்டுக்குத் தெரியாமல் விவாகரத்து வாங்குகிறார்கள் என்பது உட்பட பல அதிர்ச்சி கலந்த விஷயங்களை கதை மற்றும் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சென் எஸ்.ரங்கசாமி. அதற்காக அவரை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘எமோஜி’ இணைய தொடர் அனைவரது உணர்வுகளையும் தூண்டுகின்ற ஒரு அழகாக  சுவாரஸ்யமான காதல் கதை. வயது வந்த அனைவரும் இத் தொடரை கண்டு களிக்கலாம்.

BY

RADHAPANDIAN.