“வி 3” – திரைப்பட விமர்சனம்!

105

சென்னை:

டீம் A வென்ட்சர்ஸ் தயாரிப்பில், P. புகழந்தி இணை தயாரிப்பில், அமுதவாணன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “V3”. வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஆடுகளம் நரேன், பாவனா கௌடா, எஸ்தர் அணில் ஆகியோர் நடித்திருக்கும் படம்.

“V3″ படத்தின் கதையை பொறுத்தவரையில் ஆடுகளம் நரேனுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.  அதில் மூத்த மகள் தேர்வு எழுதுவதற்காக வெளியூர் சென்று வீடு திரும்பும் போது 5 நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதாகத் தகவல் வருகிறது. கற்பழித்தவர்களுக்கு அரசியல் பின்புலமும் அதிகாரமும் இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல், அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுக்கிறது.அந்த வழக்கு அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்த, குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டும் காவல்துறையுடன் சேர்ந்து,  அந்தக் கற்பழிப்பு கொடுமைக்கு விடிவதற்குள் நியாயம் கிடைக்கும் என்கிறார் முதலமைச்சர். அந்த குற்றத்தை செய்ததாக ஐந்து இளைஞர்களை கைது செய்வதோடு, அவர்களை காவல்துறையினர் என்கவுண்டர் செய்துவிடுகிறார்கள்.

என்கவுண்டர் செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகள் உடல்களை கேட்கிறார்கள். ஆனால், காவல்துறை உடல்களை தர மறுக்க, பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். போராடும் மக்களை அடக்ககுவதற்காக அவர்களை அடித்து, உதைத்து காவல்துறையினர் துன்புறுத்த, இந்த வழக்கு மனித உரிமை ஆணையத்திடம் செல்கிறது. மனித உரிமை அதிகாரியான வரலட்சுமி சரத்குமார், அந்த பெண்ணை கற்பழித்தது யார்? உண்மையான குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தார்களா? என்பதை  விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறன. அந்த தகவல்களுக்குப் பிறகு என்ன நடந்தது? என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கும் படம்தான் ‘வி 3’.

ஓர் அதிகாரிக்குரிய தனக்கே உரிய மிடுக்குடன் சிறப்பாக நடித்து இருக்கிறார் வரலட்சுமி. அமைதியாகவே இருந்து அதிரடி காட்டுகிறார். அவருடைய தோற்றமும் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் விந்தியாவாக நடித்திருக்கும் பாவனாவின் நடிப்பு மற்றும் அவருடைய பாத்திரப்படைப்பு மனதை உலுக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. அதை உணர்ந்து அசத்தலாக நடித்து  நம்மை பிரமிக்க வைத்து விட்டார். குறிப்பாக, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிக தைரியம் வேண்டும்..அதை மிக சிறப்பாக செயல்படுத்தி  இருக்கிறார் பாவனா.

விந்தியாவின் தங்கை பாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தர் அனில், பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற சமூகம் பற்றி கேட்கும் கேள்வியில் நடிப்பில் அதிர வைக்கிறார்.

இவர்களுக்கு  சலைத்தவன் நாங்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு விந்தியாவின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், நடுத்தர குடும்பத்து தந்தையாக அனுபவமான நடிப்பால் அனைவரையும்  மிரள வைத்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சந்திரகுமார், பொன்முடி, ஜெய்குமார், ஷீபா என அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சிவா பிரபு, கதைக்கு ஏற்ப காட்சிகளை மிக கச்சிதமாக படமாக்கி காமிராவை சிறப்பாக கையாண்டுள்ளார். அவரது ஒளிப்பதிவில் இரவுக்காட்சிகள் இயல்பாக அமைந்திருக்கின்றன. பாராட்டுக்கள்.

ஆலன்செபாஸ்டியன் இசையில் பாடல் வரிகள் கதைக்கு பலத்தை சேர்க்கின்றன. பின்னணி இசையிலும் குறைவில்லை. அனைவரும் ரசிக்கும்படி இசையமைத்து இருக்கிறார்.

சமுதாயத்தில் இன்றும் நடக்கும் பல கற்பழிப்பு அவலங்களை மிக துல்லியமாக படம் பிடித்து காட்டியிருக்கும் இயக்குநர் அமுதவாணன், காவல்துறையின் என்கவுண்டர் சம்பவங்களுக்கு பின்னணியில் இருக்கும் அரசியலைப்பற்றியும், அந்த அரசியலால் பாதிக்கப்படும் அப்பாவிகளைப்பற்றியும், பல விஷயங்களை மிக தைரியமாக சுட்டிக் காட்டி பேசியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பாவனாவைக் கடைசிக் கட்ட காட்சியிலும் அந்த அண்ணன்கள் என்று பேசவைத்து சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்குகிறார் இயக்குநர் அமுதவாணன்.பெண்கள் பாதுகாப்பு குறித்து கேட்கப்படும் கேள்விகளும் அனைத்து வசனங்களும்  சாட்டையடியாகவும் விவாதத்துக்குரியதாகவும் இருக்கிறது.

மொத்தத்தில் “V3” படத்தை  அனைவரும் குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய ஒரு உன்னதமான படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.